”குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது ஆகிய இரண்டும், நீதித்துறைக்கு முக்கியம்; இதில், தடுக்கும் வழிகள் நடப்பதில்லை. இது அநீதியின் உச்சம்,” என, உச்ச நீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ் வேதனை தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், அஸ்தம்பட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், 59.43 கோடி ரூபாய் மதிப்பில், இரு அடுக்கு நீதிமன்ற கட்டடத்தை, உச்சநீதிமன்ற நீதிபதி சுந்தரேஷ், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந் தர்மாதிகாரி ஆகியோர் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து நீதிபதி சுந்தரேஷ் பேசியதாவது:
நாடு முழுதும், 4.81 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில், 4.18 கோடி வழக்குகள், மாவட்ட நீதிமன்றங்களில் தான் தேக்கமடைந்துள்ளன. இதில் குற்றவியல் வழக்குகள் மட்டும், 3.50 கோடி வழக்குகள். மாவட்ட நீதிமன்றங்களில் தேங்கியுள்ள வழக்குகளை விரைந்து முடிக்க அரசு, வக்கீல்கள், நீதிபதிகள் ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம்.
குற்றங்களுக்கு தண்டனை வழங்குவது; குற்றங்கள் நடக்காமல் தடுப்பது ஆகிய இரண்டும் நீதித்துறைக்கு முக்கியம். இதில் தடுக்கும் வழிகள் நடப்பதில்லை. இது அநீதியின் உச்சம். குற்றவாளிகளை கூண்டில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தரும் வேலை மட்டுமே நடக்கிறது.
இதனால் அவர்களின் வாரிசுகளும், அதே வழியில் செல்லும் ஆபத்து உள்ளது. தேங்கி கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க, இதுபோன்ற புது நீதிமன்ற கட்டடங்கள் உதவியாக இருக்கும். இவ்வாறு பேசினார்.
முன்னதாக நீதிபதி சுஷ்ருத் அரவித் தர்மாதிகாரி பேசுகையில், ”இரும்பு எப்படி கடும் வெப்பத்தில் உருகி வலு சேர்க்கப்படுகிறதோ, அதுபோன்று நீதித்துறையும், அரசியலமைப்பு சட்டங்களும் மக்களின் பாதுகாப்பு கேடயமாக விளங்குகிறது,” என்றார்.