சுற்றுலாப் பயணிகளின் வருகை 19.8 சதவீதம் சரிவு; இலங்கை மத்திய வங்கி அறிக்கை.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழல் மற்றும் பதற்றமான காலநிலை காரணமாக, இலங்கையின் சுற்றுலாத்துறை மார்ச் மாதத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 183,979 ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் 19.8 சதவீத வீழ்ச்சியாகும்.

இந்த வருகை வீழ்ச்சியானது சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்படும் வருமானத்திலும் நேரடிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 354 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த சுற்றுலாத்துறை வருமானம், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 224 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை சரிவடைந்துள்ளது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டு (ஜனவரி முதல் மார்ச் வரை) தரவுகளின்படி, சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட மொத்த வருமானம் 954 மில்லியன் அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 15 சதவீத வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுசேர்க்கும் மற்றொரு காரணியான வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் நேர்மறையான வளர்ச்சியைக் காட்டியுள்ளது. வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் கடந்த மார்ச் மாதத்தில் 815 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளனர், இது 17.5 சதவீத வளர்ச்சியாகும். ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் 2,294.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது. இது 26.5 சதவீத வளர்ச்சி என்று மத்திய வங்கி அறிக்கை குறிப்பிடத்தக்கது.

Related posts

கரிவலம்வந்தநல்லூர் அகழ்வாராய்ச்சியில் சங்க காலக் கட்டுமானங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

கோடை வெப்பத்தின் உச்சம் எனக் கருதப்படும் “கத்திரி வெயில் காலம்” இன்று தொடங்குகிறது.

இலங்கை அரசாங்கம் எரிபொருள் விலைகள் மூலம் பொதுமக்களை ஏமாற்றுகிறது, – முஜிபுர் ரஹ்மான்.