முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த இரண்டு மீனவர்கள் காணாமல் போன நிலையில் இன்று நடுக்கடலில் தத்தளித்த போது உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த 02.05.2026 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் தொழிலுக்கு சென்றிருந்த கள்ளப்பாடு தெற்கு கண்ணகை அம்மன் சங்கத்தைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இரண்டு நாட்களாக காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில் கடலுக்கு சென்ற குறித்த மீனவர்களை தொடர்ந்து இரண்டு நாட்கள் படகுகள் மூலம் தீவிரமாக தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
அதன் தொடர்ச்சியாக திங்கட்கிழமை (04) காலை தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் நடுக்கடலில் தத்தளித்த போது உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவர்களின் படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாகவே கடலில் சிக்கியிருந்ததாக ஆரம்பக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 27 மற்றும் 30 வயது மதிக்கத்தக்க இவ்விரு இளைஞர்களை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகள் வெற்றியடைந்துள்ளன.