இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் அடையப்படவேண்டியது அவசியம் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
2009ஆம் ஆண்டு போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு நேற்றுடன் (மே 18ஆம் திகதி) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகள் திங்கட்கிழமை (18) உள்நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் அவர்களது அன்புக்குரியவர்களால் நினைவுகூரப்பட்டனர்.
அதற்கமைய இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகத்தின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் இதுகுறித்து செய்யப்பட்டிருக்கும் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:
“இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளடங்கலாக தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல், இன்னமும் அவர்களைத் தேடிக்கொண்டிருக்கும் குடும்பங்களை 17 வருடங்களின் பின்னரும் இன்று நினைவுகூருகிறோம். நாட்டில் நிலையான நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றில் ஆக்கபூர்வமான முன்னேற்றம் அடையப்படவேண்டியது அவசியமாகும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.