உரத் தட்டுப்பாடு மற்றும் உற்பத்திச் செலவு அதிகரிப்பு காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புகளைச் சந்திக்கின்றனர் – இலங்கை தேசிய விவசாய ஒன்றியத்தின் தகவல்!

இது குறித்து தேசிய விவசாய ஒன்றியத்தின் தலைவர் அநுராத தென்னகோன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

நெற்பயிருக்கு அவசியமான தகுந்த காலப்பகுதியில் போதிய உர விநியோகம் கிடைக்காததன் காரணமாக, இம்முறை ஒட்டுமொத்த நெல் உற்பத்தி 30 சதவீதம் வரை வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும், கடந்த காலங்களில் 2,800 முதல் 3,200 ரூபா வரை விற்கப்பட்ட களைநாசினி திரவத்தின் விலை தற்போது 5,600 ரூபாவாக இரட்டிப்பாகியுள்ளதுடன், சந்தையில் ஒரு ஹொன்டர் உரத்தின் விலை 17,200 ரூபா வரை அதிவேகத்தில் உயர்ந்துள்ளது.

அரசாங்க ஆவணங்களிலும், விவசாய அமைச்சின் மேசைகளிலும் ஒரு கிலோ நாடு நெல்லின் விலை 120 ரூபா என உத்தியோகபூர்வமாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் விவசாயிகளிடம் இருந்து நெல்லைக் கொள்வனவு செய்ய முறையான வேலைத்திட்டம் எதுவும் இல்லை.

இதன் காரணமாக, சந்தையில் நெல்லின் விலை 105 ரூபா போன்ற மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போதைய பொருளாதாரச் சூழலில், ஒரு கிலோ உரத்தை வாங்குவதற்கு ஒரு விவசாயி மூன்றரை கிலோ நெல்லை விற்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் விவசாயிகள் இந்தளவுக்கு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதில்லை.

தற்போது ஒரு கிலோ நாடு நெல்லை உற்பத்தி செய்வதற்கு மட்டுமே விவசாயிகளுக்கு சுமார் 114 ரூபா வரை செலவிட வேண்டியுள்ளது. உற்பத்திச் செலவைக் கணக்கிட்டு நியாயமான உத்தரவாத விலையை விரைவில் பிரகடனப்படுத்தவுள்ளோம்.

எனவே, அனைத்து மாவட்ட விவசாய அமைப்புகளையும் ஒன்றிணைத்து விலை முறையொன்றை முன்வைக்க திட்டமிப்பட்டுள்ளது. அரசாங்கம் உடனடியாக தலையிட்டு விவசாயிகளுக்கு சாதகமான நியாயமான விலையை நிர்ணயிக்கத் தவறினால், தற்போதைய அரசாங்கம் கடுமையான விளைவுகளையும் அரசியல் வீழ்ச்சியையும் சந்திக்க நேரிடும் என்றார்.

Related posts

இந்திய முதல்வர்களின் சொத்து வெளிப்படுத்தல் பட்டியல் வெளியீடு; தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் மூன்றாவது இடத்தில்!

பொருளாதாரத்தைப் பாதிக்காத வகையில் எரிபொருள் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. – சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம்

கொழும்பு, கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோணியர் ஆலயத் திருவிழா, நேற்று கொடியேற்றும் விழாவுடன் தொடங்கியது!