ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சாமல்கோட்டை அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் இன்று (பிப்ரவரி 28,) மதியம் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், வேட்லபாலம் கிராமத்தில் உள்ள சூர்யஸ்ரீ பயர் ஒர்க்ஸ் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு உற்பத்தி ஆலையில் 35 பேர் பணி செய்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இன்று மதியம் திடிரென பயங்கர சத்தத்துடன் வெடிச்சத்தம் கேட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயணைக்கும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்ட தகவலின்படி 20 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் உடல் கருகி அடையாளம் காண முடியாத நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் சுமார் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ரசாயனக் கலவையின் போது ஏற்பட்ட உராய்வு அல்லது மின் கசிவு காரணமாக வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்தின் சத்தம் 5 கி.மீ தூரம் வரை கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.ஆந்திர அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
உள்ளூர்வாசிகள் கூறியதாவது: வெடிச்சத்தம் சுமார் 5 கி.மீ தூரம் வரை கேட்டது. விபத்தின் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் உடல் பாகங்கள் அருகில் உள்ள விளைநிலங்களில் சிதறிக் கிடந்தன என்றனர்.
ஆந்திர முதல்வர் இரங்கல்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளதோடு, விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
