லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வோல்ட்ரீம் தோட்டத்தில் நேற்று சனிக்கிழமை (28-02-2026) மாலை ஏற்பட்ட தீ பரவலினால் 10 வீடுகளைக் கொண்ட லயன் குடியிருப்பொன்று முற்றாக எரிந்து அழிந்துள்ளது.
இச்சம்பவம் குறித்த மேலதிக விபரங்கள் வருமாறு: நேற்று சனிக்கிழமை (28) மாலை 5 மணியளவில் வோல்ட்ரீம் தோட்டத்தில் உள்ள 6ஆம் இலக்க லயன் குடியிருப்பிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
திடீரென பரவிய தீயினால் அந்தத் தொகுதியில் இருந்த 10 அறைகளும் தீக்கிரையாகியுள்ளன. தீ பரவிய சந்தர்ப்பத்தில் குடியிருப்பாளர்கள் எவரும் வீடுகளில் இருக்கவில்லை என்பதால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகளோ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனர்த்தத்தினால் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடமைகள், பெறுமதியான ஆவணங்கள் மற்றும் வீட்டு உபகரணங்கள் அனைத்தும் தீயினால் கருகியுள்ளன. ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த முழுமையான மதிப்பீடுகள் இன்னும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.
பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களும் தற்போது வோல்ட்ரீம் தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பாதுகாப்பாகத் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைத் தோட்ட நிர்வாகம் முன்னெடுத்து வருகின்றது.
மின்னொழுக்கு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸாரும் கிராம உத்தியோகத்தரும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
