தமிழர் தரப்பின் கவலைகளை இன்று அரசாங்கத்திடம் முன்வைப்பேன் – நோர்வேயின் துணை வெளியுறவு அமைச்சர்

by
0 comments

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் மற்றும் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துதல் என்பவற்றில் தொடரும் காலதாமதம் உள்ளடங்கலாக தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் வெளிப்படுத்திய மனித உரிமைகள்சார் கரிசனைகளை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக், இக்கரிசனைகள் தொடர்பில் புதன்கிழமை (04-03-2026) அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துரைக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைதந்திருக்கும் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர் அன்ரியாஸ் க்ரவிக் மற்றும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (03-04-2026) மு.ப 11.00 மணிக்கு கொழும்பிலுள்ள ஷங்கரிலா ஹோட்டலில் நடைபெற்றது. இச்சந்திப்பில் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சருடன் இலங்கைக்கான அந்நாட்டுத்தூதுவர் மே-எலின் ஸ்டேனரும் தமிழரசுக்கட்சி சார்பில் அதன் பாராளுமன்றக்குழுத்தலைவர் இரா.சாணக்கியனும் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, மாகாணசபைத் தேர்தல்கள், நீதி மற்றும் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அதன்படி தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசியலமைப்பு ஒன்று நாட்டுக்கு ஏன் அவசியம் என நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் எடுத்துரைத்த தமிழ்ப்பிரதிநிதிகள், இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத்தினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் தற்போது அரசாங்கத்தினாலும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளினாலும் முன்னெடுக்கப்பட்டுவரும் (தனித்தனியாக) நடவடிக்கைகள் என்பன குறித்து விளக்கமளித்தனர்.

banner

அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்கள் காலதாமதமின்றி நடாத்தப்படவேண்டியதன் அவசியம் தொடர்பில் நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சரிடம் சுட்டிக்காட்டிய அவர்கள், தாம் ஆட்சிபீடமேறி ஒரு வருடகாலத்துக்குள் மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், தற்போதுவரை இத்தேர்தலை நடாத்துவதில் இழுத்தடிப்புக்கள் தொடர்வதாக விசனம் வெளியிட்டனர்.

அதுமாத்திரமன்றி மாகாணசபைத்தேர்தலை உடன் நடாத்துவதை முன்னிறுத்தி சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை உள்ளிட்ட விடயங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டதுடன் இவ்விடயங்கள் தொடர்பில் நோர்வே இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிக்கவேண்;டும் என்றும் வேண்டுகோள்விடுக்கப்பட்டது.

அதேவேளை யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மை இன்னமும் கண்டறியப்படவில்லை என சுட்டிக்காட்டிய சுமந்திரன், செம்மணி உள்ளடங்கலாக அண்மைய காலங்களில் கண்டறியப்பட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் அவை சார்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்துத் தெளிவுபடுத்தினார்.

மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், படையினர் வசமுள்ள காணிகளை விடுவித்தல், வட, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கலை முடிவுக்குக்கொண்டுவரல் என்பன உள்ளடங்கலாக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் உரியவாறு நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர்கள் கரிசனை வெளியிட்டனர்.

அவற்றை செவிமடுத்த நோர்வே பிரதி வெளிவிவகார அமைச்சர், இன்றைய தினம் (04-03-2026) அரசாங்கத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவிருப்பதாகவும், அச்சந்திப்புக்களின்போது இக்கரிசனைகள் தொடர்பில் அரசாங்கத்திடம் எடுத்துரைக்கவிருப்பதாகக் குறிப்பிட்டார்.

You may also like

Leave a Reply

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?
-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00