ஜம்முவில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டபோது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

ஜம்மு – காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப்துல்லா. இவர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் மற்றும் மத்திய அமைச்சராக பதவி வகித்தவர்.

நேற்று இரவு ஜம்மு கிரேட்டர் கைலாஷ் பகுதியில், கட்சி பிரமுகர் வீட்டு திருமண விழாவில் பரூக் அப்துல்லா மற்றும் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி கலந்து கொண்டனர். பின், கட்சி நிர்வாகிகளுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு நபர் கூட்டத்தினர் மீது துப்பாக்கி சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் பரூக் அப்துல்லா அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவருடன் வந்த காஷ்மீர் துணை முதல்வர் சுரிந்தர் சவுத்ரி லேசான காயமடைந்தார். தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர், ஒரு வாகனத்தில் ஒளிந்து கொண்டிருந்தார்.

அப்போது போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், துப்பாக்கி சூடு நடத்திய நபர், அப்பகுதியை சேர்ந்த கமல்சிங் ஜம்வால் என தெரியவந்தது. அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர். அவர் மது போதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனியின் மரண செய்தி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. ஷியா முஸ்லிம்கள் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் சட்டம்- – ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க, போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பரூக் அப்துல்லா பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கி சூடு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

கடவுச்சீட்டு குடியுரிமைக்கான ஆவணம் அல்ல: இந்திய மத்திய அரசு

இந்தியாவின் பீகாரில் நடைபெற்ற நீட் மறுதேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததற்காக 30 பேர் கைது!

இந்தியா தற்காலிகமாக டெலிகிராமை முடக்கியது: தேர்வு மோசடி விசாரணை தீவிரம்