கடவுச்சீட்டு என்பது வெறும் பயண ஆவணம் மட்டுமே என்றும், அது குடியுரிமையை நிரூபிக்கும் ஆவணம் அல்ல என்றும் வெளியுறவு அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
பாஸ்போர்ட் சேவா தினத்தை முன்னிட்டு, வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலில் கூறியுள்ளதாவது: பாஸ்போர்ட் என்பது சர்வதேச பயணத்தை எளிதாக்க அரசு வழங்கும் பயண ஆவணம். ஒருவரிடம் பாஸ்போர்ட் இருப்பது மட்டும், அவரின் குடியுரிமைக்கான உறுதியான ஆதாரமாக கருத முடியாது.
நாட்டில் பாஸ்போர்ட் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. கடந்த 2025ல் 1.39 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டன. போலீஸ் சரிபார்ப்பு முடிந்த பின் ஆறு வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நாட்டில், 77 பாஸ்போர்ட் சேவை மையங்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது அது ஆறு மடங்கு அதிகரித்து, 545 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது குடியுரிமையை நிரூபிப்பதற்கான பொதுவான ஆவணங்களாக பிறப்பு சான்றிதழ், பெற்றோரின் குடியுரிமை தொடர்பான ஆவணங்கள் ஆகியவையே வலுவான ஆதாரங்களாக உள்ளன.