தென்மேற்கு ஈக்வடோரில் உள்ள சிறைச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை (09.11.2025) இடம்பெற்ற வன்முறையில் சுமார் 31 கைதிகள் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தென் அமெரிக்க நாடான ஈக்வடோரில் போதைப்பொருள் கடத்தல், அதனால் ஏற்படும் வன்முறைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று குயாகுவிலுக்கு தெற்கில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் அமைந்துள்ள சிறைச்சாலையில் இரண்டு கும்பல்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின்போது துப்பாக்கிச் சூடும் கைக்குண்டுகளை வீச்சுத் தாக்குதல்களும் இடம்பெற்றதில் சுமார் 31 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த வன்முறையில் கைதிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக விசாரணையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் இந்த வன்முறையை பயன்படுத்தி சந்தர்ப்பம் பார்த்து சில கைதிகள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வன்முறைகளுக்கு எதிராக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி டேனியல் நோபோவா குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதமும் இதேபோன்ற ஒரு வன்முறையில் 14 பேர் கொல்லப்பட்டதோடு, 14 பேர் காயமடைந்தனர்.
அத்துடன், கொலம்பியா எல்லைக்கு அருகில் உள்ள வடக்கு நகரமான எஸ்மரால்டாஸில் உள்ள சிறைச்சாலைக் கலவரத்திலும் 17 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












