தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லுார் அகழாய்வில், சங்க காலத்தை சேர்ந்த செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல் துறை சார்பில், கடந்த மாதம் சிவகங்கை மாவட்டம் கீழடி, துாத்துக்குடி மாவட்டம் பட்டணமருதுார், தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லுார், கடலுார் மாவட்டம் மணிக்கொல்லை, விழுப்புரம் மாவட்டம் ஆதிச்சனுார், கோவை மாவட்டம் வெள்ளலுார், சேலம் மாவட்டம் தெலுங்கனுார் மற்றும் நாகப்பட்டினம் என, எட்டு இடங்களில் அகழாய்வு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், கீழடி அகழாய்வில் வெளிப்பட்ட செங்கல் சுவரை போன்ற, சங்க காலத்தை சேர்ந்த செங்கல் கட்டுமானம், கரிவலம்வந்தநல்லுாரில் வெளிப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கரிவலம்வந்தநல்லுார் அகழாய்வு இயக்குநர் யதீஸ்குமார் கூறியதாவது:
கரிவலம்வந்தநல்லுாரில், 5க்கு 5 மீட்டர் பரப்பளவுள்ள இரண்டு குழிகளில், அகழாய்வுப் பணி நடக்கிறது. அதில், ஒரு குழியில், இரண்டு மீட்டர் ஆழம் வரை நடந்துள்ள அகழாய்வில், சங்ககால செங்கல்லால் ஆன, 28 அடுக்குகளுடன் கூடிய, ‘ப’ வடிவ கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள செங்கல் ஒவ்வொன்றும், தலா 40 செ.மீ., நீளம்; 20 செ.மீ., அகலம்; 7 செ.மீ., தடிமனுடன் உள்ளது.
கட்டுமானத்தில் ஒரு அடுக்கில், ஒரு வரிசையில், நீள் வாக்கில் இரண்டு செங்கல்களும், அடுத்த அடுக்கில், கிடைவாக்கில் ஒவ்வொரு செங்கல்லும் அடுக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது, கட்டடத்தின் உறுதி, நேர்த்தி, உயரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. தற்போதைய நிலையில், கட்டுமானம் எதற்கானது என்பதை அறிய முடியவில்லை. அகழாய்வு குழியின் இரண்டு பக்கங்களிலும் கட்டுமானத்தின் தொடர்ச்சி செல்கிறது. அதனால், அகழாய்வு முடிவில் தான், அதன் விபரம் தெரியவரும்.
அதேபோல், இன்னொரு குழியில், சங்ககாலத்தை சேர்ந்த, கருப்பு – சிவப்பு பானை ஓடுகள், சுடுமண் தக்களிகள், சூதுபவளம், கண்ணாடி மற்றும் சுடுமண் மணிகள் உள்ளிட்ட தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. – இவ்வாறு அவர் கூறினார்.
