டாக்காவில் நடந்த உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டியில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
25-11-2025 | டாக்கா –
உலகக் கோப்பை மகளிர் கபடி போட்டி வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. 11 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றன. லீக் போட்டிகளில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி மற்றும் உகாண்டா அணிகளை வீழ்த்தியதுடன் அரையிறுதியில் ஈரான் அணியையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இன்று நடந்த இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தைவான் அணிகள் மோதின. இதில் 35- 28 என்ற புள்ளிக்கணக்கில் தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
இதன் மூலம் கபடி போட்டிகளில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது. இதுவரை பெண்கள் உலக கோப்பை தொடர்களில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தையும், ஆசிய விளையாட்டுகளில் 3 தங்கம் மற்றும் ஒரு வெள்ளிபதக்கத்தையும், ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் தொடர்ந்து 5வது முறை பட்டத்தையும் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பிரதமர் வாழ்த்து
உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துத் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:கபடி உலகக்கோப்பையை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்த மகளிர் அணியினருக்கு வாழ்த்துகள். சிறந்த மன உறுதி, திறமை மற்றும் அர்ப்பணிப்பை வீராங்கனைகள் வெளிப்படத்தியுள்ளனர். அவர்களின் வெற்றி இளைஞர்களை கபடியில் ஈடுபடவும், பெரிய கனவுகளைக்க் காணவும், உயர்ந்த இலக்கை அடையவும் ஊக்குவிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.