மொனராகலை – எத்திமலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சட்டவிரோத கஞ்சா தோட்டங்கள் முற்றுகையிடப்பட்டதோடு, உலர்ந்த கஞ்சா என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டதாகவும், பெருமளவு கஞ்சாச் செடிகள் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கமைய, நேற்று சனிக்கிழமை (28) பகல் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 30,000 கஞ்சா செடிகளும், 1/4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 8,000 கஞ்சா செடிகளும், 1/4 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த 8,500 கஞ்சா செடிகளும் அழிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், விற்பனைக்காகத் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 100 கிலோகிராம் உலர்ந்த கஞ்சாவும் இதன்போது கைப்பற்றப்பட்டது.
இந்தச் சுற்றிவளைப்பின்போது சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
இதனுடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எத்திமலை பொலிஸாரும், சியம்பலாண்டுவ விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
