Home செய்திகள்இலங்கைஇந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இலங்கைக்குப் பயணம் – இருதரப்பு உறவுகள் குறித்த முக்கியப் பேச்சுவார்த்தைகள்!

by Amizhthu

இந்திய துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு எதிர்வரும் 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியேற்ற பின்னர், இந்திய உயர்மட்டத் தலைவர் ஒருவர் மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு நலன்கள் குறித்து விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.

முன்னதாக, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி மற்றும் இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், இந்த விஜயத்திற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மற்றும் நிகழ்ச்சி நிரல்கள் இறுதி செய்யப்பட்டன. இந்த விஜயத்தின் முக்கிய அம்சமாக, இந்தியாவின் நிதியுதவியுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தனித்துவமான திட்டங்கள் குறித்து ஆராயப்படவுள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்திற்காக இந்தியா ஏற்கனவே 450 மில்லியன் ரூபாய் நிதியை வழங்கியுள்ளது. இந்தியாவின் ‘ஆதார்’ அட்டை முறையை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்படும் இத்திட்டம், இலங்கையின் பொதுச் சேவை விநியோகத்தை டிஜிட்டல் மயமாக்குவதில் பெரும் மைல்கல்லாகக் கருதப்படுகிறது. அதே போன்று தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ள இந்திய உதவித் திட்டங்கள் மற்றும் எதிர்காலத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய செயற்திட்டங்கள் குறித்து இதன்போது விரிவாகப் பேசப்படவுள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா வழங்கிய சுமார் 4 பில்லியன் டொலர் உதவித் திட்டங்களின் தொடர்ச்சியாக, தற்போது உட்கட்டமைப்பு, எரிசக்தி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.

அண்மையில் இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், துணை ஜனாதிபதியின் இந்த விஜயம் ‘அண்டை நாட்டுக்கு முதலிடம்’ என்ற இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00