தமிழகத்தில் மே 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கை காலை 8 மணிக்கு துவங்கும் என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும், 8:30 மணி முதல் மின்னணு இயந்திரத்தில் ஓட்டு எண்ணும் பணி துவங்கும் எனவும் விளக்கமளித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 23ம் தேதி சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக அமைதியாக நடந்து முடிந்தது. ஓட்டு எண்ணும் இயந்திரங்கள்,ஓட்டு எண்ணும் மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதில்,
தமிழகம் முழுவதும் 62 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும்.ஓட்டு எண்ணிக்கை மே 4 ம் தேதி காலை 8 மணிக்கு துவங்கும். முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 8: 30 மணிக்கு மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணும்பணி துவங்கும்.
மையத்தின் ஒரு பகுதியில் தபால் ஓட்டுகளும், மற்றொரு பகுதியில் மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகளும் எண்ணப்படும். 500 தபால் ஓட்டுகளுக்கு ஒரு மேஜை என்ற விகிதத்தில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும்.தபால் ஓட்டுகள் எண்ணும் பணி முழுமையாக முடிந்த பிறகே, மின்னணு ஓட்டு இயந்திரத்தில் பதிவான ஓட்டுகள் இறுதிச்சுற்று எண்ணிக்கை துவங்கும்.
தேர்தல் பணியில் ஈடுபட்ட 3.60 லட்சம் பேரில் 2.88 லட்சம் பேர் தபாலில் ஓட்டுப் போட்டு உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
