Home தமிழகம்மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர் கட்சி

by Amizhthu

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணமடைந்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அடுத்தடுத்து நடைபெறும் காவல்துறை விசாரணை மரணங்களை தடுக்கத்தவறி வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. சட்டம் – ஒழுங்கை சீர்படுத்தி, நாள்தோறும் நடைபெறும் படுகொலைகளை தடுத்து மக்களை பாதுகாப்பதில் காட்டாத ஆர்வமும், வேகமும் விசாரணை என்ற பெயரில் அப்பாவி மக்களை அடித்துக்கொல்வதில் தமிழ்நாடு காவல்துறை காட்டுவது பெருங்கொடுமையாகும்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த ஐந்து ஆண்டுகளில் 20-க்கும் மேற்பட்ட விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 12 விசாரணை மரணங்களும், 2025ஆம் ஆண்டு 6 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.

ஜெய்பீம் படம் பார்த்து உள்ளம் உருகிய முதல்வருக்கு தம்முடைய ஆட்சியில்,
தாம் நேரடியாக நிர்வகிக்கும் துறையின்கீழ் நடைபெறும் படுகொலைகள் உள்ளத்தை உலுக்கவில்லையா?

கடமை தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறும் திமுக அரசு, காவல் விசாரணை படுகொலையைத் தடுக்க எடுத்த நடவடிக்கை தான் என்ன? ஒன்றுமில்லையே! காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் தென்மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் பெற்றிருப்பதுதான் திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்.

சமூக விரோதிகளால் நாள்தோறும் நடைபெறும் படுகொலைகள் போதாதென்று, குற்றவாளிகளை பிடித்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறையினரின் விசாரணையில் நடைபெறும் படுகொலைகளால் மக்கள் சிந்தும் வேதனைக் கண்ணீரே திமுக அரசின் அவல ஆட்சியை வீழ்த்தும் ஆயுதமாகும்!

மதுரையில் இளைஞர் ஆகாஷ் டெலிசன் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிந்து உரிய நீதி விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00