Home செய்திகள்இலங்கைஇலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.5.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரரின் ரூ.5.5 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்!

by Amizhthu

போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சுமார் 55.5 மில்லியன் (5.5 கோடி) ரூபா பெறுமதியான சொத்துக்களை முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினருக்குக் கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரினால் ஈட்டப்பட்ட பணத்தைக் கொண்டு, அவரது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட 15.5 மில்லியன் ரூபா பெறுமதியான கார் ஒன்றை முடக்குவதற்குப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் முதலில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு உறுதிப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், ஜா-எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகம்பிட்டிய பகுதியில் சந்தேக நபரால் அவரது மனைவியின் பெயரில் கொள்வனவு செய்யப்பட்ட மற்றுமொரு சொத்து கண்டறியப்பட்டது.

சுமார் 40 மில்லியன் (4 கோடி) ரூபா பெறுமதியான மூன்று மாடி வீட்டைக் கொண்ட இந்த நிலப்பகுதியை, வெள்ளிக்கிழமை 13 ஆம் திகதி முதல் 07 நாட்களுக்கு முடக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00