யுத்தத்தினால் பயங்கரவாதக் கொள்கைகளை மீண்டும் சமூகத்தில் விதைப்பதற்கு இந்நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உரிமையில்லை. இவ்வாறான விடையங்களில் அரசாங்கம் மௌனம் காப்பது ஆபத்தானது என சர்வஜன அதிகாரம் கட்சியின் சர்வஜன இளைஞர் முன்னணி எச்சரித்துள்ளது.
சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (03-06-2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிக்கும் போதே சர்வஜன அதிகாரம் கட்சியின் சர்வஜன இளைஞர் முன்னணியின் உறுப்பினர் வாசுர ஆரியரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்: முப்பது வருட கால யுத்தத்தினால் இந்த நாடு பெருமளவிலான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் எனும் பயங்கரவாத அமைப்பு நாட்டின் இறைமைக்கு எதிராகப் போராடியது. அந்த யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்த பின்னரும், மீண்டும் அந்தப் பயங்கரவாதக் கொள்கையின் தழும்புகள் துளிர்விடுவது கவலையளிக்கிறது.
புலிகளின் பயங்கரவாதக் கொள்கைகளை அல்லது அந்த அமைப்பின் தாரக மந்திரங்களை மீண்டும் மேடை போட்டுப் பேசுவதற்கு இந்நாட்டின் எந்தவொரு பிரஜைக்கும் உரிமையில்லை. ஜனநாயக ரீதியில் தமது உறவுகளை நினைவுகூருவதை யாரும் மறுக்கவில்லை; ஆனால், அதன் பெயரால் பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்யும் செயற்பாடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது
வெள்ளவத்தையில் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தல் நிகழ்வுகள் என்பது இறந்தவர்களை நினைவுகூரும் எல்லைகளைத் தாண்டி, பயங்கரவாதக் கருத்துருவாக்கங்களை மேலோங்கச் செய்யும் ஒன்றாகவே அமைந்திருந்தது. இவ்வாறான நிகழ்வுகளுக்கு அரசாங்கம் காட்டும் மென்போக்கும் மௌனமும், பிரிவினைவாதச் சிந்தனை மீண்டும் தலைதூக்க உரமிடுவதாகவே அமைகிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நல்லிணக்கத்தைப் பற்றிப் பேசினாலும், நடைமுறையில் இத்தகைய பயங்கரவாதக் கருத்துக்கள் பரப்பப்படுவதைத் தடுக்கத் தவறியுள்ளார்.
வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கிடையியே, முப்பது வருடங்களாக ஒருவரை ஒருவர் நேரில் காணாத, உரையாடாத இரு தரப்பினரிடையே இன்று ஒருவித அந்நியத்தன்மையும் அச்சமும் நிலவுகிறது. இதனைப் போக்கி, பொதுவான ஜனநாயகக் கட்டமைப்புக்குள் அவர்களை உள்வாங்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
மாறாக, புலிகளின் பிரிவினைவாதச் சிந்தனைகளைப் பிரபல்யப்படுத்தும் செயற்பாடுகளுக்கு மறைமுகமான ஒத்துழைப்பை வழங்குவது, எதிர்காலத் தலைமுறையினருக்கு மீண்டும் ஒரு இருண்ட காலத்தையே பரிசளிக்கும்;. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்கள் தயாரித்த வெசாக் கூடு சிதைக்கப்பட்டமை கூட இந்நாட்டில் இன முரண்பாட்டை தலைதூக்கும் வகையிலே அமைந்துள்ளது.
எமது நாட்டு இளைஞர்கள் இன்று எதிர்பார்ப்பது பிரிவினைவாதத்தை அல்ல, மாறாக ஒன்றிணைந்த இலங்கையையே. தேசியவாதம் என்பது இனவாதத்தோடு கலக்கப்படக் கூடாத ஒன்று. புலிகளின் சித்தாந்தத்தை மீளுருவாக்கம் செய்யும் வகையிலான எவ்விதச் செயற்பாடுகளையும் அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது.
தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, நாட்டையும் மக்களையும் ஒன்றிணைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. இவ்வாறான பிளவுபடுத்தும் செயற்பாடுகளுக்குத் தூபமிடும் அரசாங்கமாக இது மாறக்கூடாது.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், பிரிவினைவாதச் சிந்தனைகள் மீண்டும் வலுப்பெறுவது தேசிய பாதுகாப்புக்கும், நாட்டின் நிலையான அபிவிருத்திக்கும் பெரும் சவாலாக அமையும் என்றார்.