Home செய்திகள்இலங்கைஅனுர குமார அரசு பௌத்த சாசனத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கிறது; சிங்கள ராவய குற்றச்சாட்டு.

அனுர குமார அரசு பௌத்த சாசனத்தைச் சீர்குலைக்க முயற்சிக்கிறது; சிங்கள ராவய குற்றச்சாட்டு.

by Amizhthu
Bald man wearing orange monk robes speaks at a press conference with multiple microphones in front of him, against a light yellow wall.

நாட்டு மக்கள் மத்தியில் பௌத்த பிக்குகள் மீதான நன்மதிப்பைச் சீர்குலைத்து, பௌத்த சாசனத்தை அழிப்பதற்கான திட்டமிட்ட மர்மச் சூழ்ச்சியை அநுர அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அண்மையில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பிக்கு ஒருவருக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் இடையில் நேரடி அரசியல் தொடர்பு இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள சிங்கள ராவய அமைப்பின் தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை (03-05-2026) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் போதைப்பொருளுடன் பிக்குகள் சிலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கடத்தலின் முக்கிய மூளையாகச் செயற்பட்டவர் அமிதானந்த எனப்படும் பிக்கு ஆவார். இவருடைய பின்னணி குறித்து நாம் ஆழமாக ஆராய்ந்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த அமிதானந்த தேரர், தற்போதைய அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்காக வீடுகளுக்குச் சென்று வாக்குச் சேகரித்தவர். அதுமட்டுமன்றி, காலிமுகத்திடல் அரலகலய போராட்டத்தில் முன்னின்று உழைத்தவர்.

அநுர அரசாங்கத்தை ஆட்சிப் பீடத்தில் ஏற்ற அயராது உழைத்த ஒருவரே இன்று போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார். ஆனால், சமூக ஊடகங்களில் இந்தப் பிக்குவை மட்டும் விமர்சிக்காமல், ஒட்டுமொத்த பௌத்த பிக்குகளையும் இழிவுபடுத்தும் வகையில் பதிவுகள் இடப்படுகின்றன. இவ்வாறு பிக்குகளைத் தூற்றுபவர்களின் சமூக ஊடகப் பக்கங்களை நாம் ஆராய்ந்த போது, அவர்கள் அனைவரும் ஜே.வி.பி அல்லது அநுர அரசாங்கத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்பது உறுதியாகியுள்ளது. தனது சொந்த அரசியல் ஆதரவாளர்களைக் கொண்டே தவறு செய்ய வைத்து, அதனைச் சாட்டாக வைத்து ஒட்டுமொத்த பௌத்த மதத்தையும் மௌனிக்கச் செய்ய அரசாங்கம் முற்படுகிறது. இது நாட்டில் மதச்சார்பற்ற சமூகத்தை உருவாக்கும் ஒரு நீண்டகாலத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி பௌத்தர்களின் மிக உன்னதமான வெசாக் பௌர்ணமி தினம் உதயமாகிறது. இந்த புனித வெசாக் வாரத்தில் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்கள் அஹிம்சையைப் போற்றி தர்மத்தைப் பின்பற்றுகின்றனர். ஏனைய மதத் தலைவர்களின் பிறந்தநாட்களில் விலங்குகள் கொல்லப்பட்டு மது அருந்திக் கொண்டாடப்படும் நிலையில், புத்த பெருமானின் பிறந்தநாளில் மட்டுமே தானம் வழங்கி, உயிர்களுக்கு அபயமளிக்கும் உன்னத செயல் நடைபெறுகிறது.

துரதிஷ்டவசமாக, இந்த வெசாக் வாரத்திற்குள்ளேயே முஸ்லிம்களின் ஹஜ் பெருநாளும் இம்முறை வருகின்றது. ஹஜ் பண்டிகையின் போது வீடுகளில் பெருமளவில் விலங்குகள் அறுக்கப்படுகின்றன. இலங்கையின் அரசியலமைப்பின் 9 ஆவது பிரிவின்படி பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். எனவே, பௌத்தர்களின் புனித வெசாக் வாரத்தை மதித்து, அந்த ஒரு வார காலத்திற்கு மாத்திரம் இலங்கையில் எங்கும் விலங்கு அறுப்புக்கள் இடம்பெறாதவாறு சட்டம் இயற்ற அரசாங்கம் முன்வர வேண்டும். முஸ்லிம் சகோதரர்களும் மதத் தலைவர்களும் இந்த அஹிம்சைப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கிறோம்.

பிக்குகள் தவறு செய்யும் போது அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், தேவையேற்படின் அவர்களின் பிக்கு அந்தஸ்தைப் பறித்து நாட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தவும் மகாநாயக்க தேரர்களுக்கு சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசியலமைப்பின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட சங்க நீதிமன்றம் ஒன்றை உடனடியாக நிறுவ வேண்டும்.

தற்போதைய அநுர அரசாங்கம் பௌத்த சாசன அமைச்சைச் சிதைக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து இந்தச் சங்க நீதிமன்றத்தை அமைப்பதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அவ்வாறான ஒரு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே, போலிப் பிக்குகளிடமிருந்தும், அரசாங்கத்தின் அரசியல் மிரட்டல்களிலிருந்தும் பௌத்த சாசனத்தைப் பாதுகாக்க முடியும். பிக்குகளை அடக்கும் இந்தச் செயல்முறை நிறுத்தப்படாவிட்டால், எதிர்காலத்தில் மகாநாயக்க தேரர்களுக்கும் இதே நெருக்கடி நிலை ஏற்படும் என்பதை நாம் எச்சரிக்கையாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றார்.

You may also like

Leave a Reply

-
00:00
00:00
Update Required Flash plugin
-
00:00
00:00